களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்
உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்து வைத்து. விசாரணை செயத் பின்னரே நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் என்று பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரே நேற்று உயிரிழந்துள்ளார். சித்தங்கேணி, கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் நான்கு நாள்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவும் இல்லை, விடுவிக்கப்படவும் இல்லை என்பதனால் உறவினர்கள் அச்சமடைந்திருந்தனர்.
இதையடுத்து உயிரிழந்த நபரின் தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்திருந்தார். அதனால் சந்தேகநபர்கள் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர்.
பொலிஸாரின் ஆட்சேபனையடுத்துசந்தேகநபர்கள் இருவரும் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அதன்பின்னர் இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிறைக்காவலரின் காவலுடன் மேற்படி சந்தேகநபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சை பயனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் தெரியவரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை 3, 4 மணித்தியாலங்களுக்கு மேலாக முகத்தை சொப்பின் உறையால் கட்டி வைத்து தாக்கி சித்திரவதை செய்தனர் என்று உயிரிழந்த இளைஞர் மருத்துவமனையில் தெரிவித்த வீடியோ நேற்று அவரின் உறவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.