இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படக் காரணமானோரைச் சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் அண்மையில் வழங்கிய
தீர்ப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராட்டியுள்ளார்.
நீதிமன்றம் அடையாளம் காட்டிய கும்பலினால் தவறாகக் கையாளப்பட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு அல்லது அவர்களின் சட்டவிரோத சொத்துக்களை கைப்பற்றி இலங்கையின் கடனைத் திருப்பிச் செலுத்த அதனைப் பயன்படுத்துவதற்கு தற்போதைய அரசு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி செயல்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உட்பட அவர்களது அரசின் பல அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் போன்றோர்தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படப் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது.
உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, 'பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்களில் ஒரு சிலரை நீதிமன்றம் பெயரிட்டிருந்தாலும், அவர்களுடன் தொடரபு; டைய பலர் குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்கள். ஆனால், அவர்கள் நீதிமன்றத்தால் பெயரிடப்படவில்லை.
இது, நாட்டின் வருங்காலத் தலைவர்களுக்கும் ஒரு கரும் புள்ளியாகும். மேலும், எதிர்காலச் சந்ததியினர் ஒரு தேசத்தை எவ்வாறு சரியாக ஆள்வது மற்றும் நாட்டின் பிரஜைகள் சுயலாபத்துக்கு அல்லாமல் தேசத்துக்காக உழைத்து தலைவர்களாக உயர வேண்டும் என்பதை இதன் மூலம் படிப்பினையாக உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.