கண்டி - பேராதனை பேருந்து நிலையத்திற்கு அருகில் மண் மேடு சரிந்து விழுந்ததில் வயோதிபர் ஒருவர்
உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு பெய்த அடை மழை காரணமாக கொழும்பு செல்லும் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள மண்மேட்டின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது அருகில் இருந்த 4 கடைகள் மண்மேட்டின் கீழ் புதைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த இடத்திற்கு அருகில் உள்ள அறையில் தங்கியிருந்த பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போன நபரை கண்டுபிடிக்க மின்சார சபை அதிகாரிகள், தீயணைப்பு துறையினர், அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய, இன்று அதிகாலை காணாமல் போனவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
எப்படியிருப்பினும் இந்த மண் மேடு சரிந்ததால் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையிலான பிரதேச ரயில் பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையினால், மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இரவுநேர அஞ்சல் புகையிரதம் ஓஹிய புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயில், ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், மலையக ரயில் பாதையை சீரமைக்க சுமார் 03 மணித்தியாலங்கள் தேவைப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கண்டி - நுவரெலியா வீதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் அந்த வீதியின் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
பொல்கஹாஹங்க பிரதேசத்தில் இந்த மரம் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன் காரணமாக கண்டி - நுவரெலியா வீதியின் கெலிஓயா மற்றும் வெலிகல்ல பகுதிக்கு இடைப்பட்ட பகுதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பதுளை - கொழும்பு பிரதான வீதி பலாங்கொட - சீலகம பகுதியில் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு மற்றும் பாறைகள் காரணமாக வீதி முற்றாக தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.