2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டதின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ள
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இந்த திட்டத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமை குறித்து விளக்கமளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (21) இடம்பெற்றிருந்த நிலையில், அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்துள்ள அவர், வரவு செலவு திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் சில நல்ல மற்றும் கெட்ட அம்சங்களைக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட முன்மொழிவுகள் அடுத்த ஆண்டுகான வரவு செலவுத் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர் என்ற வகையில், வரவு செலவுத் திட்டத்தில் உள்ள தவறுகளையும் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி மக்களுக்கு நன்மைளை பெற்றுக் கொடுப்பது தமது கடமையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடைமுறை வேலைத்திட்டம் எதுவும் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நாமல் ராஜபக்ஷ, இந்த திட்டத்தின் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் காணப்படுவதாக கூறியுள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த வரவு செலவுத் திட்ட உரை மீதான வாக்கெடுப்பிற்கு 122 ஆதரவாக வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுதந்திர கட்சியும் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
இதேவேளை, குழுநிலை அல்லது மூன்றாம் வாசிப்பு விவாதம் நாளை முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்றையதினம் மாலை 6:00 மணிக்கு நடத்தப்படும்.
முன்மொழியப்பட்ட திட்டத்தின் மூலம் தேசத்திற்கான புதிய பாதையை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.
2024 நிதியாண்டுக்கான பட்ஜெட் பற்றாக்குறை 2,851 பில்லியன் என்பதோடு மொத்த வருவாய் 4,107 பில்லியனாகவும் மொத்த செலவினம் 6,978 பில்லியனாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.