முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது என்பதை அறிய, எதிர்வரும்
24ஆம் திகதி விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனையிடப்படவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
நேற்று நடைபெற்றஅகழ்வுப் பணியின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து இன்று (நேற்று) இரு மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
“அந்த எலும்புக் கூடுகளின் உடற்பகுதியில் இருந்து துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுச் சிதறல்கள், விடுதலைப் புலிகளின் இலக்கத்தகடு மற்றும் சயனைட் குப்பி ஆகியன கண்டெடுக்கப்பட்டன.
“தொடர்ந்து இப்பணி முன்னெடுக்கப்படும். எதிர்வரும் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசேட ஸ்கான் இயந்திரம் மூலம் சோதனை இடம்பெறும். “அதன்போது இந்த மனிதப் புதைகுழி எவ்வளவு தூரம் வியாபித்து இருக்கின்றது, எத்தனை படைகளில் எலும்புக்கூடுகள் அடுக்கப்பட்டிருக்கின்றன எனும் தகவல்களை அறியமுடியும்.
“களனிப் பல்கலைக்கழக தொல்பொருள் பீடத்தினரே குறித்த ஸ்கான் இயந்திரத்தைக் கொண்டு வருகின்றனர்” என்றார்.