இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜெய் ஷா, இலங்கையில் கிரிக்கெட்டை கட்டுப்படுத்த மாட்டார் என
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையத்தளத்தின் யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரே இந்த நாட்டின் கிரிக்கெட்டை கட்டுப்படுத்துவதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த சர்ச்சைக்குரிய அறிக்கையால் பலரும் அதிர்ச்சியடைந்திருந்தனர்.
இந்தக் கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறிய ஜனாதிபதி விக்கிரமசிங்க, இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளரிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசியதாகக் கூறினார்.
"இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு ஜெய் ஷா உதவுகிறார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். நான் ஷாவிடம் பேசி, இந்த பிரச்சினையில் அவரது பெயர் இணைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தேன்..."
"எனது நிலைப்பாடு என்னவென்றால், நான் நியாயமான தரப்பை ஆதரிப்பேன் என்பதாகும். அது இந்த அணியாக இருந்தால், அவர்கள் எனது ஆதரவைப் பெறுவார்கள். சட்டபூர்வமான அணி மற்றையதாக இருந்தால், அதற்கு எனது ஆதரவு கிட்டும். மூன்றாவதாக ஒரு சட்டப்பூர்வ அணி காணப்பட்டால், அதற்கே எனது ஆதரவு. அதனை நான் தீர்மானிப்பதில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலே அதைத் தீர்மானிக்கும்” என்றார்.
ஐசிசி தடை குறித்து கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்படலாம் என்பதைத் தான் புரிந்து கொண்டதாகத் தெரிவித்தார்.