ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொண்ணூறு சதவீதம் நிறைவடைந்துள்ள போதிலும், அதற்கு தீர்வு
தேவைப்படாதது போல் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நடந்துகொள்கிறார் என, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், நாடாளுமன்றத்தில் நேற்று (23) தெரிவித்தார்.
விசாரணைகளின் விளைவாக, இந்தக் குற்றத்திற்குக் காரணமானவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 23 பேர் இன்னும் விளக்கமறியலில் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், தற்போதைய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டாம் என மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழுத்தம் கொடுத்ததாகவும், அது ஏனென வினவிய போது, முஸ்லிம் என்ற காரணத்தினால் அவருக்கு நீதி அமைச்சு வழங்கக்கூடாது எனக் கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல்வேறு பௌத்த மதங்களை பின்பற்றும் பல்வேறு அதிகாரிகளுக்கு எதிராக, கார்டினல் அவர்களால் ஜனாதிபதி உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடிதங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கார்டினல் அவர்களும் ஏனைய தரப்பினரும், மீண்டும் இன, மத முரண்பாடுகளை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்பதையே இந்த உண்மைகள் எடுத்துக்காட்டுவதாகவே தாம் உணர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹரக் கட்டா போன்றவர்களுக்கு வரும் ஒவ்வொரு அழைப்பும் சரிபார்க்கப்படும் என்றும் தெரிவித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர், ஹரக் கட்டா போன்றவர்களின் அழைப்புகளை சரிபார்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியதாகவும் அவர்கள் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும், பாதாள உலகக் குழுக்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடைமுறை தயாரிக்கப்படும் எனவும் இது தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 118 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் கூறிய அமைச்சர், தகவல் அளிப்பவர்களின் இரகசியம் பேணப்படும் எனவும் அமைச்சர் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தின் போது இது குறித்து மாத்திரம் பாதுகாப்புப் படையினரும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கவனம் செலுத்திய வேளையில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலகக்கோஷ்டித் தலைவர்கள் அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், போராட்டத்தின் காரணமாகவே பாதாள உலகம் உருவாகியுள்ளதாகவும் வலியுறுத்தினார்.
இலங்கையில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட காலிமுகத்திடல் போராட்டங்கள் காரணமாக நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரித்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் அதிகரித்துள்ள பாதாளக்குழுக்களின் செயல்பாடுகளை குறைப்பது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக டிரான் அலஸ் கூறியுள்ளார்.
அத்துடன், இவ்வாறாக போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொலிஸ் துறையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய டிரான் அலஸ், சுமார் இரண்டாயிரம் பொலிஸார் இந்த ஆண்டில் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், குறித்த வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் பணிகள் தற்போது படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மேலும் 5 ஆயிரம் பொலிஸாரை அடுத்த ஆண்டில் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.