“கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த நடிகர் சூர்யா, நலமுடன் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
“சிறுத்தை” சிவா இயக்கும் “கங்குவா” திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். மும்பை, கொடைக்கானல், ஹைதராபாத்தில் முதல் மற்றும் இரண்டாம்கட்டப் படப்பிடிப்புகள் நடந்து முடிந்தன.
தற்போது சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி ஃபிலிம் சிட்டியின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. சூர்யாவின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, 10 அடி உயரத்தில் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த ரோப் கேமிரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், சூர்யாவுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், படப்பிடிப்பை நிறுத்தியுள்ளனர். தற்போது, சூர்யா ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில், தன் எக்ஸ் தளத்தில், “நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என் அன்பான இரசிகர்களே, “விரைவில் குணமடையுங்கள்” என நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு நன்றி. இப்போது நன்றாக இருக்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிற்கு எப்போதும் நன்றியுடன்” எனப் பதிவிட்டுள்ளார்.