மட்டக்களப்பு – வெல்லாவெளியில் முன்னெடுக்கப்பட இருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு பொலிஸாரால் தடுத்து
நிறுத்தப்பட்டு அதை ஏற்பாடு செய்த ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் என். நகுலேஸ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று முன்னெடுக்கப்பட இருந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு வெல்லாவெளி பொலிஸாரால் நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிகழ்வு ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ் மற்றும் மாவட்ட ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வு ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் அவ்விடம் வந்த வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸை அழைத்து களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தினூடாகப் பெறப்பட்ட தடையுத்தரவை வழங்கி இந்நகழ்வை உடன் நிறுத்துமாறு தெரிவித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.