விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்
பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று (27) பிற்பகல் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இது தொடர்பான கடிதத்தை ரொஷான் ரணசிங்கவிடம் கையளித்தார்.
இலங்கையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அமைச்சரவை அமைச்சர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமைச்சரவை அமைச்சர்கள் பலர் இன்று இரவு பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அமைச்சின் அலுவலகங்களுக்குச் சென்றுள்ள ரொஷான் ரணசிங்க, அங்கிருந்த உத்தியோகத்தர்கள் அனைவருக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“ஆசியாவின் தீவாக இருந்த நாம், இன்று ஆசியாவின் கள்வர்களாக மாறியிருக்கிறோம். ஒரு வகையில் பார்த்தால், இன்று கள்வர்கள் வெற்றிபெற்று விட்டார்கள்.
“அமைச்சராக இருந்துகொண்டு இந்த ஊழல் மோசடிகளைத் தடுத்து நிறுத்துவேன், அல்லது அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு தடுத்து நிறுத்துவேன் என்று நான் ஏற்கெனவே கூறியிருந்தேன். இப்போது, அடுத்த ஜனாதிபதித் தேர்தலோடு இந்த ஊழல் மோசடிகளைத் தடுத்து நிறுத்துவேன் என்று கூறிக்கொள்கிறேன்.
“நான் எங்கிருந்தாலும், நல்லதுக்கு துணை போவேன். இப்போது இருக்கும் பிரச்சினைகளைச் சரி செய்யவே இவருக்கு நாம் ஒப்படைத்தோம். அதைச் சரி செய்ததும், நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பு அடுத்த அரசாங்கத்திடமே உள்ளது.
“எவ்வாறாயினும், அரசியல் ரீதியில் நான் இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. பதவிகள் இருப்பது பணிகளைச் செய்வதற்கே. அதற்காகத்தான் பொலன்னறுவை மக்கள் எனக்கு வாக்களித்தனர். எனது பதவியில் நான் எனது பணிகளைச் செய்ய முடிந்தளவுக்கு முயற்சி செய்தேன்.
“அதன்போது ஊழல் மோசடிகளுக்கு எதிராகச் செயற்படும்போது, இவ்வாறான முடிவுகள்தான் கிடைக்கும். இது தான் கடந்த 50 வருடங்களாக நடந்துவருகிறது. அதனால்தான் இந்நாட்டு மக்கள் கஷ்டப்படுகிறார்கள்” என்று, அமைச்சின் முன்னாள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.