“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அதற்கான கலந்துரையாடல்களுக்கு நான் அழைத்திருந்தேன்.
அதில் சிலர் கலந்து கொள்ளவில்லை” என, நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சிசபை தேர்தலை நடத்துவதற்கு ஆலோசிக்கப்பட்ட போதும் நிதிப் பற்றாக்குறை இருந்தது. எனினும், அந்தத் தேர்தல் தொடர்பான வழக்கு, விசாரணை நிலுவையில் உள்ளது.
“நாடாளுமன்றத்தில் முன்னைய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட சட்டமூலமே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ளது” என்றார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, “மார்ச் மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். எனினும், காலம் தாழ்த்தப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது” என்றார்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, “மாகாண சபை தேர்தல் நீண்டகாலமாக நடத்தப்படவில்லை. பழைய முறையில் தேர்தலை நடத்துமாறு நாம் கோரிக்கை முன்வைக்கிறோம்” எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர், “நீங்கள் ஜனாதிபதியை அடிக்கடி சந்தித்து கலந்துரையாடி வருகிறீர்கள் அல்லவா? அதன்போது உங்களது கோரிக்கையையும் முன்வையுங்கள்” என்றார்.