அடுத்த பொலிஸ் மா அதிபர் பதவிக்கான நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்தப் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா
அதிபர் தேசபந்து தென்னக்கோன், பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான டிரான் அலஸ் ஆகியோரும் கலந்துரையாடல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தப் பதவியில் நீண்ட காலமாக பணியாற்றிய சி.டி.விக்கிரமரத்ன அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு, புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதில் பல்வேறு பிணக்குகள் அண்மைக்காலத்தில் அரங்கேறியிருந்தன.
முன்மொழியப்பட்ட பெயர் தொடர்பில் ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதன் காரணமாக, பொலிஸ் மா அதிபர் நியமனம் தாமதமானதாகவும் பல செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால் உண்மையில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதிக்கே நியமன அதிகாரம் உண்டு, அதன்படி நியமனத்தை வழங்கியவுடன், சபாநாயகர் தலைமையிலான அரசியலமைப்பு சபையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.
இந்த அரசிலமைப்பு சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
மேலும், இதில் சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட பத்து உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.