ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான பிரசார நடவடிக்கையை
மேற்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய சம்மேளனம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சியின் முக்கிய சில பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதுடன், புதிய நியமனங்களும் இடம்பெறவுள்ளன.
2024 வரவு - செலவுத் திட்டக் கூட்டத் தொடர் டிசம்பரில் முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றம் ஜனவரி வரை ஒத்திவைக்கப்பட்டு, ஒருமாத கால விடுமுறை வழங்கப்படும். அந்தக் காலப்பகுதியிலேயே வழமையாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடுவார்கள்.
எனவேதான் ஜனவரி முதல் முழு வீச்சுடன் பிரசாரத்தில் இறங்குவதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
-மாலைமுரசு