பாடசாலை இடைவேளை நேரத்தில் உண்ணுவதற்காக, லன்ச்ஷீட்டில் உணவை சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களைக் கண்டித்து அந்த
லன்ச் ஷீட்களை அம்மாணவர்களையே உண்ணச் செய்வித்த பாடசாலை அதிபரை டிசெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
47 வயதான மேற்படி அதிபரை, நேற்றைய (28) தினம் கைது செய்துள்ள நாவலப்பிட்டி பொலிஸார், இன்றைய தினம் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்த போதே, நீதவான் நிலந்த விமலவீர மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
நாவலப்பிட்டி, ரம்புக்பிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சுற்றப்பட்ட மதிய உணவுத் தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை கட்டாயமாக உண்ணச் செய்வித்த அதிபர் தொடர்பான செய்தி ஒன்று பதிவாகியிருந்தது.
இந்த நிலையில், மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரைத் தொடர்புகொண்டுள்ள கல்வி அமைச்சர், இவ்விடயம் தொடர்பான தகவல்களைப் பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 11ஆம் தர மாணவர்கள் குழுவொன்று, மதிய உணவை லன்ச் ஷீட்டில் சுற்றிக் கொண்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இப்பாடசாலை பொலித்தீன் அற்ற வலயமாக பராமரிக்கப்படுவதால், குறித்த மதிய உணவுத் தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை உண்ணுமாறு குறித்த மாணவர்களை அதிபர் வற்புறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான சம்பவத்திற்கு முகங்கொடுத்த இரண்டு பாடசாலை மாணவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்ததாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சம்பவத்திற்கு முகங்கொடுத்த ஏனைய மூன்று மாணவர்களும் பாடசாலைக்குச் சென்றுள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர், இது தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸாருக்கும் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்படி, பஸ்பாகே பிரதேச கல்விப் பணிப்பாளரினால் ஸ்தல விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், விசாரணையின் வசதிக்காக சம்பந்தப்பட்ட அதிபரை இடமாற்றம் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அmதன்படி, நாவலப்பிட்டி - ரம்புக்பிட்டிய மத்திய மஹா வித்தியாலயத்தைச் சேர்ந்த மேற்படி அதிபரை, உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பளை வலயத்துக்கு மாற்றியதாக, கல்வி அமைச்சர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.