1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வவுனியாவில் இன்று

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ஊடகவியலாளர்கள்,

“இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற தரப்புக்கள் தமிழ் ஊடகங்களை அடக்கியாள நினைப்பது வழமையான தொடர்கதையாகவே இருந்து வருகின்றது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் அதிகாரத் தரப்பின் வன்முறைகளால் 39 ஊடகவியலாளர்களின் இன்னுயிர்களை நாம் இழந்துள்ளோம். அதற்கான நீதி மறுக்கப்பட்ட நிலையில் இன்றும் நீதி கோரி போராடி வருகின்ற தரப்பாக நாம் இருக்கின்றோம்.

“இதேவேளை, மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் இந்த அரசு, ஊடகங்களை ஒடுக்கி, மக்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அத்துடன் வவுனியாவில் கடமையாற்றிவரும் பிராந்திய ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாகப் பொலிஸாரின் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றார்கள். எனவே, ஐனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஊடகவியலாளர்களாகிய நாம் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்போம் என்பதை அதிகாரத் தரப்புக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்” என்றனர்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், “ஊடக சுதந்திரத்தை உறுதி செய், பொய் வழக்கு போடாதே, ஊடகப் படுகொலைக்கு நீதி வேண்டும், கருத்துச் சுதந்திரமே மக்களின் சுதந்திரம்” போன்ற கோஷங்களையும் எழுப்பியிருந்தனர்.

வவுனியா பழைய பஸ் நிலையத்தில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டப் பேரணி வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையம் வரை சென்றதுடன் மீண்டும் பழைய பஸ் நிலையத்தை அடைந்து முற்றுப் பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், வவுனியா வர்த்தக சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி கண்டறியும் சங்கங்கள், போராளிகள் நலன்புரிச் சங்கம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு ஆகிய அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும், மதகுருமார், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

(மாலைமுரசு)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி