பாறுக் ஷிஹான்
பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச்
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வீடு ஒன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் குறித்த துப்பாக்கிதாரி தப்பிச் சென்ற நிலையில் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதி அஹமட் லேனில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் இளம் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டுக்கு வந்த நபர் பெண்ணை துப்பாக்கியினால் தாக்கிய பின் துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.
இச்சம்பவத்தில் சித்தீக் சிபானியா (32) என்பவரே காயமடைந்துள்ளார். இப்பெண்ணின் கணவர் அவுஸ்திரேலியாவில் இருப்பதாகவும் இவர் ஒரு மௌலவி எனவும் ,குறித்த பெண்ணுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேலும் காத்தான்குடி பொலிஸார் குறித்த பகுதியிலுள்ள சி.சி.ரி.விக்களையும் சோதனை செய்து சந்தேக நபரை ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.
அத்துடன் காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பெண்ணின் வீட்டிலிருந்து துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.