ஐக்கிய மக்கள் சக்திக்கும்
ஜனாதிபதிக்கும் கலந்துரையாடல் நடந்து வருவதாக வாய்ச் சொல் தலைவர் லண்டன் சென்று குறிப்பிட்டுள்ளார்.
இது அப்பட்டமான பொய். திசைகாட்டியும் யானைக்கும் இடையிலான டீலே இன்று நாட்டிலேயே மிகப் பெரிய டீலாகும். சமீபத்தில் சுயாதீன தொலைக்காட்சியில் நிகழ்த்தப்பட்ட நாடகம் இதை நிரூபித்துள்ளது.
இதை கேள்விக்கு உட்படுத்திய ஊடகவியலாளருக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி சட்ட நடவடிக்கை எடுத்திருக்கும் நேரத்தில், அந்த நபருடனான யானை- திசைகாட்டியின் டீல் நாட்டுக்கே நிரூபிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
52 நாள் அரசியல் சூழ்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில் பிரதமராக பதவி ஏற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போது தான் கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்து வருவதால், அதனை நிராகரித்தேன்.
மக்களின் ஆசியுடனயே நான் பதவிக்குச் செல்வேன் என குறிப்பிட்டேன். நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்சர்களின் பாதுகாவலராக இருக்க விரும்பாத காரணத்தினால் தான் பின்னர் ஏற்பட்ட போராட்ட காலப்பகுதியில் பிரதமர் பதவியையோ அல்லது ஜனாதிபதி பதவியையோ ஏற்க மறுத்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
பூரண முடியாட்சியைத் தருவதாக கூறினாலும், நாட்டை வங்குரோத்து செய்தவர்களுடன் சஜித் பிரேமதாசவுக்கு டீல் இல்லை. டீல் போடவும் மாட்டோம். இந்நாட்டின் 220 இலட்சம் மக்களுடன் தான் தமக்கு டீல் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ரஜரட்ட விவசாயிகள் மாநாடு நேற்று(16) அநுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வாய்ச் சொல் தலைவர் போல லண்டன், கனடா, அமெரிக்கா செல்வதை விட அனுராதபுரத்தில் விவசாயிகளுடன் இருப்பதே எனக்கு சிறந்தது. பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களுக்கு பயன்படுத்தும் பணத்தில் வெளிநாடுகளுக்குச் சென்று தன்னாலும் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்தவும் முடியும் என்றாலும், அந்த பணத்தில் தம்புத்தேகம தேசிய பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகளுக்கு பஸ்களை வழங்குவது அதனை விட பெறுமதியானது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்
விவசாயியை ஸ்மார்ட் விவசாயியாக மாற்றும் அதே நேரத்தில், விவசாயிகளின் விளை, உற்பத்திப் பொருட்களை ஓரே தடவையில் சந்தைக்கு விடுக்காது, விளைபொருட்களை சேமித்து சரியான நேரத்தில் சந்தைக்கு விடுவதன் மூலம் தமது உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான விற்பனை விலையை வழங்குவோம். விவசாயிகளுக்கான இந்தக் கடமையை நாம் நிறைவேற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அறிவு, புத்தாக்கம், டிஜிட்டல் மயமாக்கல் போன்றவற்றின் மூலம் விவசாயிக்கு ஸ்மார்ட் விவசாய உபகரணங்களை வழங்குவதன் மூலம் விவசாயத்தை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வோம். கடல் மட்டத்தை விட கீழ் மட்டத்திலுள்ள நெதர்லாந்து, பாலைவன நிலப்பரப்பான இஸ்ரேல் உள்ளிட்ட அரபு நாடுகள் போன்று ஸ்மார்ட் விவசாயிகள் எமது நாட்டிலும் உருவாக வேண்டும்.
நாட்டின் உணவுப் பாதுகாப்பையும், உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் திறனையும் உருவாக்கும் யுகத்தை நாம் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். கீழ் மட்டத்தில் இருந்து கட்டார், டுபாய் மற்றும் மாலைதீவுகள் போன்ற நாட்டிற்கு அரசியை ஏற்றுமதி செய்யும் திட்டத்தை நாம் வகுத்துள்ளோம். சாதாரண விவசாயிகளும், தமது உற்பத்திப் பொருட்களை நேரடியாக தாமே சர்வதேச சந்தையில் விற்கு டொலர் ஈட்டும் முறையை நாம் அறிமுகப்படுத்துவோம்.
நாட்டிற்கு அர்ப்பணிப்போடு மகத்தான சேவையாற்றிய இராணுவ வீரர்கள் உட்பட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பாதுகாப்போம். வீதிக்கு தள்ளப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை வழங்குவோம். நுண்நிதி கடன் வலையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவோம். பயிர் சேதத்தைத் தடுக்க நடைமுறை மற்றும் வலுவான பயிர்க் காப்பீட்டு முறையை ஏற்படுத்தித் தருவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சமீபகாலமாக விவசாய இடங்களும் நிலங்களும் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, விவசாயிகளின் விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டு, நட்பு வட்டார முதலாளித்துவக் கூட்டாளிகளுக்கு குறித்த இடங்கள் வழங்கப்பட்டன. இதற்கு முடிவு கட்டி, விவசாயிகளின் பாரம்பரிய விவசாய இடங்களையும், நிலங்களையும் மீண்டும் அவர்களுக்கே வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.