வெல்லம்பிட்டி மீதொட்டமுல்ல வடுகொடவத்த பிரதேசத்தில்
சட்டவிரோத மதுபானம் உள்ளதாகக் கூறப்படும் வீடு ஒன்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவைத் தாக்கிக் காயப்படுத்திய சந்தேகநபரை துப்பாக்கியால் சுட்டு அவரைக் கட்டுப்படுத்தி கைது செய்ததாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் சந்தேக நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரம் நடைபெறுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸார் மீதொட்டமுல்ல வடுகொடவத்தை பகுதியிலுள்ள வீடொன்றை சோதனையிடச் சென்றுள்ளனர்.
இதன்போது பொலிஸாரின் சோதனைக்கு அந்த வீட்டில் வசிக்கும் சந்தேக நபர் பொலிஸாரை அனுமதிக்கவில்லை. இருப்பினும் பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்துபோது சந்தேக நபர் பொலிஸாரைத் தாக்கி காயப்படுத்தியதுடன், அவர்களது பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது, பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் சுட்டதில் சந்தேக நபரின் வலது காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டது.
சந்தேக நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்