பாறுக் ஷிஹான்
வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு
வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இரு தரப்பின் வாதப்பிரதிவாதங்களின் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கான தடையுத்தரவொன்றை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர்.
வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைப்பதான நிகழ்வானது இனமுரண்பாட்டையும் இனவன்முறையையும் ஏற்படுத்தும் என சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு குறித்த தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
மேற்குறித்த வழக்கு நேற்று (19) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் டி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மன்றில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.
இதன்போது இரு சாராரின் விண்ணப்பங்கள் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான் குறித்த வழக்கை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
மேலும் இனமுரண்பாடுகள் ஏற்படும் இனக்கலவரம் ஏற்படும் என்ற வகையில் தடையுத்தரவை பொலிஸார் கோரியிருந்த போதிலும் அவ்வாறு ஏற்படுத்துவார்கள் என்ற சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்யாது இவ்வாறான கட்டளைகளை பெற்றிருப்பதானது அடிப்படையற்றது என்பதை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஊடகங்களிடம் சட்டத்தரணி பே.பிரேம்நாத் தெரிவித்தார்.