சுற்றுலா விசாவில் இலங்கையில் தங்கியிருக்கும்
வெளிநாட்டவர்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இணையம் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களை ஆரம்பித்து நடத்துவது தொடர்பில் முழுமையாக ஆராய்ந்து நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு கோரி புதிய மக்கள் முன்னணி நேற்று (19) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
குறிப்பாக இது நிதிக்குற்றம் என்பதால், இது குறித்து அண்மையில் இலங்கை மத்திய வங்கிக்கு எழுத்துமூல முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் காயத்ரி சொய்சா தெரிவித்துள்ளார்.
இந்த கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பான ஊக்குவிப்பு திட்டங்கள் தற்போது பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நாடு பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரும் இவ்வேளையில் இது சமூகப் பேரழிவை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், இந்த வலையில் சிக்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விகிதமும் இதனால் அதிகரிக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மேற்குறிப்பிட்ட உண்மைகளை கருத்திற் கொண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் ஏனைய அனைத்து நிறுவனங்களும் இணைந்து நடவடிக்கை எடுத்து இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.