தொலைபேசி நிறுவனங்களில்
இருந்து பெறப்பட்ட சிம்களை முறைகேடாகப் பயன்படுத்தி பணக்கார வர்த்தகர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து 2 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் தொலைபேசி விற்பனை பிரதிநிதி ஒருவரே கணினிகள் கண்காணிப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நேற்று (20) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கையில் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் தொலைபேசி நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இவரிடமிருந்து தொலைபேசி பழுதுபார்த்தல், சிம்களைக் கொள்வனவு செய்தல் போன்ற பல சேவைகளை வர்த்தகர்கள் உட்பட பலர் பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
வர்த்தகர்களின் சிம் தரவுகளை சூட்சுமமாக பெற்ற சந்தேக நபர் அந்த வர்த்தகர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இரகசியமாக பிரவேசித்து அந்த கணக்குகளில் இருந்து 210 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகளால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறான மோசடி சம்பவம் தொடர்பில் சந்தேக நபருக்கு எதிராக எம்பிலிப்பிட்டிய நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அவரை எதிர்வரும் 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த விசாரணை அதிகாரிகள் அனுமதி கோரினர்.
இதனையடுத்து சந்தேக நபரை ஜூலை 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.