கட்சிகளின் தீர்மானத்துக்குப் புறம்பாக, ஜனாதிபதியிடமிருந்து
பரவலாக்கப்பட்ட நிதி மற்றும் மதுபான உரிமம் பெற்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
பல எம்பிக்கள் தங்கள் கட்சித் தலைவர்களுக்குத் தெரியாமல் அபிவிருத்தி நிதி மற்றும் மதுபான உரிமம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இவ்வாறு நிதியைப் பெற்றுக் கொண்ட தமது கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கட்சித் தலைமைக்கு தெரியாமல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த நிலையில், அந்த எம்பிக்கள் எதிர்காலத்தில் ஒழுக்காற்று விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லக்க்ஷமன் கிரியெல்ல, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி என்ற ரீதியில் நிதி மதுபான அனுமதிப்பத்திரம் மற்றும் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் போன்றவற்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்றார்.