முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது திட்டமிட்டு வேண்டுமென்றே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை, பின்னர் அதனை ஒரு காரணமாக வைத்து அவர் எம்பி பதவியை இராஜினாமா செய்து விட்டு புகலிடம் கோரி வெளிநாடு சென்றமை போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் இலங்கையர்களுக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளன.
இதன் காரணமாக வெளிநாடுகளுக்கு விசா கோரி விண்ணப்பிக்கும் பல இலங்கையர்கள் விசா பெறுவதற்கு வாரக் கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் பலர் சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.
இவ்வாறான சூழ்நிலையில் இலங்கையர்களுக்கு விசா வழங்கும் போது கடுமையாக ஆராயுமாறு பல வெளிநாட்டு தூதரகங்கள் அந்த அலுவலகங்களின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளன.
குறிப்பாக, அரசியல்வாதிகள் விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது மிக அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு கனடா சென்று அங்கு அரசியல் தஞ்சம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.