பாறுக் ஷிஹான்
கல்முனை வடக்கு பிரதேச
செயலக விடயங்களுக்கு உடனடி தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரி இன்று (24) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
இதனால் மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன் பதற்ற நிலையும் தோன்றியது.
அத்துடன் பிரதேச செயலகத்தின் நுழைவாயிலையும் பூட்டிய நிலையில் அதிகாரிகளை உள்நுழைய விடாமல் தடுத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்துக்கு எதிராக இடம்பெறும் நிர்வாக அடக்குமுறைகளை கண்டித்தும் அதற்கான உரிய தீர்வு கோரியும் தொடர்ச்சியாக 92 நாட்களாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மட்டக்களப்பு - கல்முனை வீதி தடைப்பட்டுள்ளதால் வாகனங்களை மாற்று வீதிகளில் அனுப்புவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதேவேளை 7 மணித்தியாலங்களாக கல்முனை நகர் போராட்டக்காரர் வசமிருந்த நிலையில் கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல் ஒன்றுக்கு அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை 8.00 மணிமுதல் பி.ப 2 மணி வரை கல்முனை மாநகரம் ஸ்தம்பித்திருந்ததுடன் அனைத்துப் பொது போக்குவரத்துக்களும் தடைப்பட்டிருந்தன. மருத்துவ சேவை வாகனங்கள் மாத்திரம் மக்களால் அனுமதிக்கப்பட்டன.
அத்துடன் தமது நியாயமான கோரிக்கைக்கு பதில் என்ன? என்பது உட படலான பல கோஷத்துடன் மக்கள் வீதியில் அமர்ந்தும் போராட்டம் செய்தனர்.