குருணாகல் மாவட்டத்தின்
மல்லவப்பிட்டி பிரதேச மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டடுள்ள குடிநீர்ப் பிரச்சினையை ஆளுனர் நஸீர் அஹமட் அதிரடி உத்தரவொன்றின் மூலம் துரிதகதியில் தீர்த்து வைத்துள்ளார்.
குருணாகல் நகர சபையின் எல்லைக்கு உட்பட்ட மல்லவப்பிட்டி கிராமத்தில் சுமார் 1,500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள நில அமைப்பு காரணமாக நிலத்தடி நீரை குடிநீராகப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக தங்களது கிராமப் பிரதேசத்துக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குமாறு குறித்த கிராமவாசிகள் மிக நீண்ட காலமாக உரிய அதிகாரிகளிடம் பல்வேறு வழிகளில் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
எனினும் குருணாகல் மாநகர சபையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீர்விநியோக இணைப்புகளை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறுப்பில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக புதிய இணைப்புகளை தற்போதைக்கு வழங்க முடியாத நிலை காணப்படுவதாக கிராமவாசிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக குறித்த கிராமவாசிகள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக கௌரவ ஆளுனர் நஸீர் அஹமட் அவர்களின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதை அடுத்து, மல்லவப்பிட்டி பிரதேச மக்களுக்கு துரித கதியில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். அதன் பிரகாரம் நேற்றைய தினம் (24) மல்லவப்பிட்டி பிரதேச மக்களுக்கான குடிநீர் இணைப்புகள் வழங்கும் செயற்பாடு, உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மல்லவப்பிட்டி தாருல் ஹஸனாத் பள்ளிவாசலில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட் கலந்து கொண்டார்.
மல்லவப்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு சுமார் 200 வரையான புதிய குடிநீர் இணைப்புகள் இதன் மூலம் வழங்கப்படவுள்ளது. அத்துடன் கிராமத்தின் உட்கட்டமைப்பு வசதிகள், குப்பை அகற்றும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்திய ஆளுனர்நஸீர் அஹமட் அவற்றையும் விரைவில் தீர்த்துவைப்பதற்கு முயற்சிப்பதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் குருணாகல் மாநகர ஆணையாளர் அஜந்த. நீர்வழங்கல் சபையின் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் சமன், ஹஸனாத் பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் எம். நாசிம் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.