ரத்கம விதுர என்ற பாதாள
உலகக் கும்பலுடன் தொடர்பு வைத்து தனது கணக்கில் பணத்தை வைப்பிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தென் மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை உடனடியாக விசாரணை செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரை உடனடியாக சப்ரகமுவ மாகாணத்துக்கு இடமாற்றம் செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பாதாள உலக நபர் ஒருவர் விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் அங்கு சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அப்போது சந்தேக நபருக்கு பாதுகாவலர்களாக உயரடுக்கு பாதுகாப்பு பொலிஸார் பலர் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் பாதாள உலகக் குழுத் தலைவர் ரத்கம விதுரவின் மைத்துனர் என்பது தெரிய வந்துள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்
இந்நிலையிலேயே, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கணக்குகள் மற்றும் பாதாள உலகக் கும்பலுடன் அவர் தொடர்பு வைத்திருந்த விதம் தொடர்பான விசாரணைகளுக்கு மேலதிகமாக, பாதாள உலக நபருக்கு உயரடுக்கு பாதுகாப்பாக இருந்த பொலிஸ் அதிகாரிகளின் நடத்தை தொடர்பான விசாரணைகளும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.