முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்கக் கோரியமை தொடர்பில் ஆட்சேபனைகளை முன்வைக்கும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இன்று (04) சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளார்.
இதன்படி எதிர்வரும் 10ஆம் திகதி உரிய ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிணைக் கோரிக்கை இன்று அழைக்கப்பட்டபோது, நீதிபதி அரசாங்க சட்டத்தரணியிடம் கேள்வியொன்றை முன்வைத்ததுடன், இந்தப் பிணைக் கோரிக்கை தொடர்பில் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பீர்களா எனக் கேட்டார்.
இந்த கோரிக்கை தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் எதிர்பார்ப்பதாகவும் எழுத்து மூலம் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசாங்க சட்டத்தரணி குறிப்பிட்டார்.
மேலும் இந்த வழக்கை விசாரிக்கும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார கம்பஹா மேல் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளதால், ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறும் அரசாங்க சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரினார்.
இதன்படி, ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதி, பிணைக் கோரிக்கையை எதிர்வரும் 11ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறும் உத்தரவிட்டார்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி கொழும்பு தெமட்டகொட பகுதியில் அமில பிரியங்க என்ற இளைஞன்காரில் கடத்திச் செல்லப்பட்டு, அவரை தாக்கியமை உட்பட 18 குற்றச்சாட்டுகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் ஹிருணிக்காவுக்கு 3 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தெரிந்ததே.