தரமற்ற மருந்துகளை கொள்வனவு
செய்தமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மனைவி மற்றும் மகள்களின் 931 இலட்சம் ரூபா பெறுமதியான 16 நிலையான வைப்புக் கணக்குகள் மற்றும் 3 ஆயுள் காப்புறுதிப் பத்திரங்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தடை செய்துள்ளது.
இந்த தடை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து தடையை நீட்டித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சரின் மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகளின் கணவர் ஆகியோரின் தனியார் வங்கிக்கு சொந்தமான 9,31,25,000 ரூபா மதிப்புள்ள நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் தொடர்பான சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் காரணமாக 7 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிப்பதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடந்த ஜூன் மாதம் 27ஆம் திகதி செயற்பட்டது.
இதன்படி, 2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் 53(1) பிரிவின்படி, முன்னாள் சுகாதார அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களின் 16 நிலையான வைப்புக் கணக்குகளையும் 3 காப்புறுதிக் கொள்கைகளையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்ய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.