தனது காதலனை திருமணம்
செய்து கொள்வதாக தாயிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய யுவதியின் சடலம் குமாரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலருந்து மூதூர் பொலிஸாரால் இன்று (05) மீட்கப்பட்டுள்ளது.
சேருநுவர தங்கநகர் பகுதியைச் சேர்ந்த நடேஸ் குமார் வினோதனி என்ற இருபத்தைந்து வயதுடைய யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் (13) தனது காதலனை திருமணம் செய்து கொள்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய தனது மகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தாயார் அருணாசலம் சசிகலா சேருநுவர பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனிடையே, காணாமல் போன யுவதியை கொன்று கிணற்றில் வீசியதாக மூதூர் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின்படி, மூதூர் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் மூதூர் நீதிவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்ததோடு நீதிவான் முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட யுவதியின் காதலன் கிள்ளிவெட்டி பிரதளசத்தில் வசிப்பவர் என்றும், பின்னர் அவர் அப்பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலத்துடன் மீட்கப்பட்ட யுவதியுடையது என சந்தேகிக்கப்படும் சூட்கேஸில் காணப்பட்ட பல பொருட்களையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நீதிவான் விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்ப உத்தரவிட்டதுடன் சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.