கொழும்பு, கொம்பனி வீதி அல்டேர்
அடுக்குமாடி குடியிருப்பின் 67ஆவது மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த மாணவ, மாணவிகளின் கையடக்கத் தொலைபேசிகளின் சிம் அட்டைகள் தொடர்பான தொலைபேசி அழைப்புகளின் தரவு பதிவுகளை கொம்பனிவீதி பொலிஸாரிடம் வழங்குமாறு கோட்டை நீதிவான் கோசல சேனாதீர, சம்பந்தப்பட்ட தொலைபேசி சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உயிரிழந்த மாணவர் மற்றும் மாணவிகளின் கையடக்கத் தொலைபேசி தரவு பதிவேடுகளை பெற்றுக் கொள்வதற்காக கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி வழங்கி கோட்டை நீதிவான் கோசல சேனாதீர இந்த உத்தரவை பிறப்பித்தார்.
கையடக்கத் தொலைபேசி தரவுப் பதிவுகளைப் பெறுவதற்கு அனுமதி கோரிய கொம்பனிவீதி பொலிஸாரின் முறைப்பாட்டை கையாண்ட அதிகாரி, உயிரிழந்த மாணவனும் மாணவியும் அல்டேர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்களது நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்ததாகவும் அந்த நண்பர் பாகிஸ்தானியர் எனவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மாணவனின் வீட்டுக்கு பொலிஸார் சென்று விசாரணை நடத்தியபோதும் மாணவியின் தந்தை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி என்பதனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் குறித்த நபருக்கு தூதுவர் சிறப்புரிமைகள் இருந்தால், உரிய சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதிவான் கோசல சேனாதீர உத்தரவிட்டார்.