பாறுக் ஷிஹான்
நீண்ட காலமாக பாடசாலை
மாணவர்கள், இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
கடந்த வியாழக்கிழமை(4) விசேட தகவல் ஒன்றையடுத்து அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிஸ் குழுவினர் மருதமுனை கடற்கரை பிரதேசத்தில் சிவில் உடையில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது குறித்த ஆலா என்ற பறவையின் செல்லப்பெயர் கொண்ட 39 வயதுடைய முஹம்மது இஸ்மாயில் அஸ்மீர் இளைஞனை பொலிஸார் சுற்றி வளைத்துஇளைஞனின் உடைமையில் இருந்து 11 கிராம் 300 மில்லி கிராம் கஞ்சாவைக் கைப்பற்றினர்.
பின்னர் மறுநாள் வெள்ளிக்கிழமை (5) சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது 14 நாட்கள் விளக்கமறியலில் சந்தேக நபரை வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேக நபர் இரண்டாவது தடவையாக போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதாகி உள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை 22 வயதுடைய இளைஞன் ஒருவன் கடந்த புதன்கிழமை (3) போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.