பலாங்கொடை தொரவெல ஓயாவில்
78 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான 17 வயதுடைய பாடசாலை மாணவனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை பதில் நீதிவான் டி. எம். சந்திரசேகர உத்தரவிட்டார்.
சந்தேக நபரின் உடல், உள மற்றும் சமூக நோய்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும், சந்தேக நபரை DNA பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
பலாங்கொடை முகுனமலை பிரதேசத்தில் வசித்த எம்.எல். சிரியாவதி என்ற பெண் ஒருவர் கடந்த 27ஆம் திகதி குளிப்பதற்கு தொரவெல ஓயாவுக்கு சென்றிருந்த நிலையில், அங்கு தொரவெல ஓயாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் வைத்தியர்களுக்கு மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்தமையினால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் இது தொடர்பில் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இதன்போது பலாங்கொடை நீதிவான் பிரேத பரிசோதனையை நடத்துமாறு உத்தரவிட்டார்.
இதன்படி, சடலம் பலாங்கொடை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, பெண் பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கழுத்தையும் வாயையும் நெரித்து கொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.