எஸ்.ஆர்.லெம்பேட்
மன்னார் வங்காலை கடற்ரையில்
பீடி இலைகள் கொண்ட பொதிகள் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டபோது இன்று திங்கட்கிழமை(8) காலை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட மூடைகள் கைப்பற்றப்பட்டு மூவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்காலை கடற்கரையில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட பொதிகள் ஏற்றப்படுவதாக கடற்படையினர் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
குறித்த தகவல்களுக்கமைவாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ்.சந்திரபாலவின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் (1) ஹேரத்தின் வழி நடத்தலில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சில்வா தலைமையில் சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அங்கு சென்று வங்காலை கடற்கரையில் வாகனம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகள் ஏற்றப்பட்ட நிலையில் அவற்றைக் கைப்பற்றினர்.
80 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 888 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டதுடன் மன்னார் பகுதியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.