சவூதி அரேபியாவில் -நீண்டகாலமாக
தொழில் புரிந்து வரும் இலங்கை புலம்பெயர் பணியாளர்களை கௌரவிக்கும் பாரம்பரிய நிகழ்வொன்றை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அண்மையில் ஆரம்பித்து வைத்தார்.
சவூதி அரேபியாவின் மிகப்பெரும் பன்னாட்டு பால் உற்பத்தி நிறுவனமான அல்மராய் கம்பெனியில் முப்பது வருடங்களுக்கு மேலாக நிதி நிர்வாகத்தில் பணிபுரிந்த திரு சேனாதீரவை கௌரவித்து நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது .
ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
தூதுவர் அமீர் அஜ்வத் - இங்கு கருத்து தெரிவிக்கையில் :-
புலம் பெயர்ந்து வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்கள் - இலங்கை மற்றும் சவூதி அரேபியாவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் பங்குதாரர்களாக இருக்கின்ற அதேவேளை தங்களின் புலமைகள் மூலம் அவர்கள் தொழில்புரிகின்ற நாட்டின் அபிவிருத்திக்கும் தங்களது சம்பாத்தியத்தின் மூலம் தாய் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய பங்களிப்பை வழங்குகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.
பல்லாயிரக்கணக்கான இலங்கையருக்கு தொழில் வழங்கியுள்ள அல்மராய் நிறுவனத்துக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்ட தூதுவர் அமீர் அஜ்வத், இலங்கையின் மனிதவளத்தில் அந்நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கைக்கும் நல்லெண்ணத்துக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வின் போது தூதரகத்தின் உயர் அதிகாரிகளும் அல்மராய் நிறுவனத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.