2020 முதல், கல்வித்துறையில் 40,000
ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவும் போது, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் முகமாக ஏறக்குறைய 22,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். கொரோனா கோவிட் காலத்தில் இணையவழி ஊடாக கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது, இந்த உபகரணங்கள் போதியளவு இல்லாமல் இருந்தும் ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி தொலைதூரக் கல்வி நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்து வந்தனர்.
இவ்வாறு தமது பணிகளை சிறப்பாக முன்னெடுத்து வந்த இந்த 22,000 பேருக்கும் ஏன் அவர்களுக்கென குறிப்பிட்ட நிலையான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாதிருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(09) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
இந்த 22000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் கல்வித்துறையில் உரிய இடம் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர், இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த தரப்பினருக்கு ஏற்புடைய உரிய தீர்வு கிடைக்கும் திகதி என்ன? என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மேலதிகமாக கல்வித்துறையில் காணப்படும் 7 பகுதிகளிலும் குறைபாடுகள் காணப்படுவதாகவும், அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.