அதுருகிரிய நகரில் உள்ள பச்சை
குத்தும் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த அந்ந நிலையத்தின் உரிமையாளரின் மனைவிக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
எவ்வாறாயினும், அவரது நுரையீரலில் ஒரு தோட்டா காணப்படுவதாகவும், அதை அகற்றினால், அவரது உயிருக்கு கடுமையான ஆபத்து ஏற்படலாம் என்றும் அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் கூறியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆம் திகதி அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கோபுரத்துக்கு அருகில் அமைந்துள்ள பச்சை குத்தும் நிறுவன திறப்பு விழாவின்போது இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது.
இச்சம்பவத்தில் கிளப் வசந்த மற்றும் நயனா ஆகியோர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்.
பச்சை குத்துபவரின் மனைவி, கிளப் வசந்தவின் மனைவி, பிரபல பாடகர் சுஜீவா மற்றும் மற்றொரு ஆணுமே காயமடைந்தனர்
தற்போது களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 'கிளப் வசந்தவின் மனைவியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, 4 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுஜீவாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மற்றையவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.