மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின்
கணக்காய்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மரண அச்சுறுத்தலுக்கு உள்ளான கணக்காய்வாளர் ஒருவரின் வீட்டில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கடமை துப்பாக்கியை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, கடமை தவறிய குற்றச்சாட்டின் பேரில் கம்பஹா பொலிஸ் அத்தியட்சகர் குறித்த சார்ஜன்டை பணி இடைநிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.
மினுவாங்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள குறித்த கணக்காய்வு அதிகாரியின் வீட்டின் பாதுகாப்புக்காக இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நியமிக்கப்பட்டிருந்தார்.
இன்று இரவு 9.30 மணியளவில் மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கணக்காய்வாளர் வீட்டுக்குச் சென்று சோதனையிட்ட போது பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கொடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் மகசீன் என்பனவற்றை அவருக்கு வழங்கப்பட்ட முன் அறையில் காணப்பட்ட நாற்காலியில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்தே சம்பந்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.