அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச்
சம்பவத்தில் பிரபல வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலைய உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணை நடத்துவதைக் காட்டும் வீடியோ நாட்டின் முக்கிய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரவியது.
நாட்டின் பெரும்பான்மையினரின் கவனத்தை ஈர்த்துள்ள கொலைச் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரிடம. விசாரணை நடத்தப்பட்டமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
'பொலிஸார் மீதான குற்றச்சாட்டுகள்'
பல பயனர்கள் சமூக ஊடகமான பேஸ்புக் மூலம் பொலிஸார் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.
சில பயனர்கள் 'குற்றவியல் சட்டத்தால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை' என்று குறிப்பிட்டிருந்தனர்.
மேலும் 'இது தவறு. இதுபோன்ற விடயங்களை பொலிஸார் வெளியிட முடியாது.' என ஒருவரும் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
இதேவேளை, ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்படும் இவ்வாறான அறிக்கைகளை பெற்றுக் கொள்வதன் ஊடாக விசாரணையின் பக்கச்சார்பற்ற தன்மையில் சிக்கல் ஏற்படுத்தும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்தார்.
இந்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'
ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்படும் இவ்வாறான அறிக்கைகள் ஊடாக விசாரணையின் பக்கச்சார்பற்ற தன்மையில் சிக்கல் ஏற்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் பிபிசி தெரிவித்துள்ளார்.
"இப்படியெல்லாம் செய்ய முடியாது. பொதுவாக குற்றவியல் சட்டப்படிதான் அறிக்கை எடுக்க வேண்டும்."
" பொலிஸார் இவ்வாறு பெறும் வாக்குமூலங்கள் ஆதாரமாகிவிடா. குற்றவியல் சட்டப்படி வாக்குமூலம் பதிவு செய்ய வேறு வழி இருக்கிறது."
"ஊடகங்களைக் கொண்டு வந்து பதிவு செய்யும் போது, முழு விசாரணையின் பாரபட்சமற்ற தன்மை பற்றிய கேள்வி எழுகிறது."
"ஊடக விளம்பரம் பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்களா? எப்போதாவது ஒரு வழக்கின்போது, மறுபக்கம் அந்தப் பொலிஸ் அதிகாரிகளை குறுக்கு விசாரணை செய்யலாம்."
"மற்றொரு விஷயம், காவலில் இருக்கும் சந்தேக நபரின் தனியுரிமையைப் பாதுகாப்பது. பொலிஸ் அதிகாரிகள் இந்த விடயங்களை எங்கே கற்றுக்கொள்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை."
“இப்படி வாய்மொழியாக பதில் சொல்ல முடியாது. சந்தேக நபர் கூறுவதனைக் கேட்டு எழுத்துபூர்வமாக கையெழுத்து பெற வேண்டும். மறுபுறம் ஊடகங்களைக் கொண்டு வந்து அப்படிச் செய்யும்போது விசாரணையின் பாரபட்சமற்ற தன்மை குறித்து சந்தேகம் உள்ளது." ஜனாதிபதியின் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
இதனிடையே, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டு, இந்தச் செயலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
"இது பொலிஸாரின் முழு முட்டாள்தனம். ஒரு குற்றவாளியை நீதியின் முன்னிறுத்த தொழில் ரீதியாக குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், விளம்பரம் பெற அல்ல. இதுபோன்ற நேரடி "ஒப்புதல்" முக்கிய ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பகிரப்படும். இந்த வழக்கின் இறுதி முடிவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டிருந்தார்
மனித உரிமை ஆணையம் கடிதம்
தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இதுவரை முறைப்பாடு கிடைக்கவில்லை என அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா பிபிசி சிங்கள சேவைக்குத்
தெரிவித்தார்.
"இதுவரை யாரும் முறைப்பாடு செய்யவில்லை, அப்படி கிடைத்தால் விசாரணை நடத்துவோம்." எனவும் அவர் கூறினார்.
பொலிஸ் மா அதிபரின் கவனம்
இதேவேளை, அத்துருகிரிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலைய உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட காணொளிப் பதிவு தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ பிபிசி சிங்கள சேவைக்குத் தெரிவித்தார்.