மூத்த ஒளிப்பதிவாளர் சோமரத்ன
திஸாநாயக்கவின் சிங்கபாகு திரைப்படத்தை திரையரங்கில் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து யூரியூப் அலைவரிசையில் ஒளிபரப்பியதாகக் கூறப்படும் கண்டியைச் சேர்ந்த ஒருவரை பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கட்டுகஸ்தோட்டை சிகிரி திரையரங்கில் வைத்து சிங்கபாகு திரைப்படம் முழுவதையும் தனது கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்துள்ளதாக பொலிஸாரின் 24 மணி நேர விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
சந்தேகநபர் (11) கண்டி நீதிவான் நீதிமன்றில் பொலிஸ் கணினி குற்றப் பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திரையரங்கம் ஒன்றில் கையடக்கத் தொலைபேசி மூலம் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் கணினி குற்றப் பிரிவில் தாம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றதாக சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்தார்.
பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படத்தை மோசடியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது கடும் குற்றம் என்றும், இது உள்ளூர் திரையுலகத்தின் இருப்புக்கு கடும் சவாலாக அமையும் என்றும் அவர் கூறினார்.
மிகவும் கடினமான செயல்முறைக்குப் பிறகு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் திரைப்படத் துணுக்குகளை மோசடியாகப் பதிவுசெய்து வெளியிடுவோர் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்