பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு
மேற்கொள்ளப்பட்டுள்ள எந்த நடவடிக்கைகளையும் திரும்பப் பெற பொலிஸார் தயாராக இல்லை என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
புத்தளம் வண்ணாத்தவில்லுவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய எரியூட்டியின் மூலம் 881 கிலோ 355 கிராம் கொக்கேய்னை அழிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களை கொல்லப் போவதாக சமூக வலைத்தளங்களில் பெயர் பட்டியலை வெளியிட்டு அச்சுறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த யுத்தத்தின்போது பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்து அஞ்சாமல் உயிர்த் தியாகம் செய்தது போன்று போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒழிப்பதற்காக தமது உயிரை தியாகம் செய்யக்கூடிய ஆயிரக்கணக்கான பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளனர்.
முறையான திட்டத்தின் பிரகாரம் நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தை அடக்குதல் என்பன தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசபந்து தென்னகோன் வலியுறுத்தினார்.
இதுவரை 900 பாதாள உலக சந்தேக நபர்களில் 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டிசம்பர் மாதம் முதல் இதுவரை 296 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாதாள உலகம் எனப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களும் போதைப்பொருள் கடத்தலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பாரியளவிலான சொத்துக்களே இந்த குற்றவாளிகளுக்கு உணவளிப்பதால் குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு மக்களின் ஆதரவு தேவை என பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.