ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதி கிடைக்கும் வரை எதிர்வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்துவதற்கு கத்தோலிக்க ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது.
ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் வின்ஸ்டன் பெர்னாண்டோ ஆண்டகை அது தொடர்பில் நேற்று தெரிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்களான நிலையிலும் அதனால் துயரப்படும் மக்களுக்கு நீதி கிடைக்காமை கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானம் தொடர்பில் வத்திக்கான் மிகுந்த அவதானத்துடன் உள்ளதாக தெரிவித்துள்ள வின்ஸ்டன் ஆண்டகை, அது தொடர்பில் இத்தாலியிலிருந்து நெவில் ஜோ அடிகளார் தெரிவித்துள்ள கூற்றையும் நினைவுபடுத்தியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்களுக்கு நீதிகோரும் வகையில் நாடளாவிய ரீதியில் கத்தோலிக்க ஆலயங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருப்பலி பூசையின் பின்னர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கறுப்பு உடைகளை உடுத்து விசுவாசிகள் மற்றும் குருக்களும் அமைதி பேரணிகளில் ஈடுபட்டனர்.
நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் கறுப்பு ஞாயிறு தினமாக அவற்றுக்கு பெயரிட தீர்மானித்துள்ளதாகவும் ஆயர் வின்ஸ்டன் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்