1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று சுழற்சி முறையில் போராடிக் கொண்டிருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் தர்சினி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்று வருகின்ற சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் நேற்று மாலை கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 5ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

மாற்றுக் கட்சியினரின் இன்னல்கள் அவர்களது குழப்பும் செயற்பாடுகளை தந்திரோபாயமாகப் பாவிக்கின்றார்கள். இந்த இடத்திலிருந்து எம்மை எழுப்புவதற்கு துடிக்கின்றார்கள்.

அவர்களுக்கு ஒன்றினைத் தெரிவிக்க விரும்புகின்றேன். எவ்வித துயரமோ துன்பமோ இருந்தாலும் இவ்விடத்தினை விட்டுச் செல்ல மாட்டோம். எங்களுக்கு சர்வதேசத்தின் தீர்வு கிடைக்கும் வரை இவ்விடத்தில் நின்று சுழற்சி முறையில் போராடிக் கொண்டிருப்போம்.

அம்பிகை அம்மணிக்கு அம்மனின் அருள் கிடைக்க வேண்டி இவ்விடத்தில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடாத்துவோம்.

பாதுகாப்புத் தரப்பினர், புலனாய்வுப் பிரிவினர் நாம் இவ்விடத்திற்கு போராட்டத்திற்காக வந்த போது எம்மை புகைப்படங்கள் எடுத்தனர்.

ஆனால், அவர்கள் எங்கு அனுப்புகின்றார்கள் என்று தெரியவில்லை. எமது உயிரை துச்சமென நினைத்து எவருக்கும் பயப்படாமல் இவ்விடத்தில் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

தமிழ் பேசும் மக்கள் அனைவரும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். எங்களுக்கு ஆதரவு தர வேண்டும். கட்சிக்கு அப்பால் தனிப்பட்ட ரீதியில் நாங்கள் போராட்டத்தை நடாத்தி கொண்டிருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் இப்போராட்டத்தை நடாத்துகின்றது என்ற சிந்தனை தமிழ் பேசும் மக்கள் எவருக்கும் வரக்கூடாது. ஏனெனில், கட்சிக்கு அப்பால் பெண்களாகிய நாங்கள்தான் இப்போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கின்றோம். 

தமிழ் பேசும் ஆண்களாகிய நீங்கள் கட்டாயம் எமக்கு ஆதரவு தர வேண்டும். எங்களை ஊக்கப்படுத்தி கை கொடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி