இராகலை தோட்டம் 2ஆம் பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொழிலாளர் குடியிருப்பில் இன்று (12) அதிகாலை 3.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த தீ விபத்தால் அந்த வீடுகளில் குடியிருந்த 14 குடும்பங்களை சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆண்கள் 26 பேரும், பெண்கள் 32 பேரும், 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 3 பேரும் அடங்குகின்றனர்.
தீ விபத்தையடுத்து, பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்த நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது.
இத்தீவிபத்தால் பெருமளவில் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.
பாதிக்கப்பட்டவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தோட்ட ஆலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை.