முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு (வெலிஓயா) பிரதேசத்திற்கு இன்று (மார்ச் 14) மாலை விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், அப்பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு வெலி ஓயா அஹெட்டுவெவ பிரிவேனாவில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது வெலிஓயா பிரதேசத்தின் தற்போதை நிலைமைகள், மக்கள் முகம்கொடுக்கும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்த கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், தர்மத்தின் ஊடாக சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கான நீதியினை நிலை நாட்டுவதே தனது முதன்மையாக குறிக்கோளாக காணப்படுவதாக இதன்போது தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு புதுக்குடியிருப்பு பெண் தொழில் முயற்சியாளர் கூட்டுறவு சங்கத்தில் இன்று (மார்ச் 14) முற்பகல் இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட அரசியல் தலைவராக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நியமிக்கப்பட்டதன் பின்னர் இப்பகுதிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருந்தது.
யுத்தத்தினால் அதிகளவு பாதிப்புக்கு உட்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு காணப்படுவதோடு அதிகளவு பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உள்ள மாவட்டமாகவும் காணப்படுகின்றமையால் இம்மாவட்டத்தின் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்க்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழனென்ற ரீதியில் தமக்கு இருப்பதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
புதுக்குடியிருப்பு இளைஞர் கழகங்களின் சம்மேளனம், உடையார்கட்டு மூங்கிலாறில் அமைந்துள்ள சம்மேளன மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த Y2K இளைஞர்களுக்கான தலைமைத்துவ பயிற்சிப் பட்டறையில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார்.
சமூகத்தை வாழிகாட்டும் நாளைய தலைவர்களாக மாறவுள்ள Y2K இளையோர்களுக்கு இவ்வாறானதொரு தலைமைத்துவப் பயிற்சி அவசியம் தொடர்பில் குறிப்பிட்ட கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், இவ் இளையோர் தம்மத்தியில் காணப்படும் பலங்கள், பலவீனங்கள், வாய்ப்புக்கள் தொடர்பில் அறிந்துகொண்டு அதற்கேற்ற முறையில் எவ்வாறு முன்னகரலாம் என்பது தொடர்பிலும் இதன்போது தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தாம் தற்போது முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
சுயதொழிலில் ஈடுபட்டு தமது பொருளாதாரதை முன்னெடுத்துவரும் பெண்களை பலப்படுத்துவதன் ஊடாகவே உண்மையான தேசிய பொருளாதாரத்தை இலங்கையில் கட்டியெழுப்ப முடியுமென்றும் வன்னி மாவட்டத்தில் அதனை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் இதன்போது தெரிவித்தார்.