காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எல்லாப் பிரிவுகளையும் முழுமையாக இயங்க வைக்கும் முகமாக சுகாதார, தொழில்நுட்ப பிரிவின் பணிப்பாளர் குழு, நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
பிரதேச மக்களின் நன்மை கருதி, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை அதன் வழமையான சிகிச்சைகளை நடத்திச் செல்ல ஏற்பாடுகளைச் செய்து தருமாறு, காத்தான்குடி தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழுத் தலைவரும் அவ்வைத்தியசாலையின் அத்தியட்சகருமான வைத்தியர் எம்.எஸ்.எம். ஜாபிர், மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட்டின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
அந்த வேண்டுகோளை, நஸீர் அஹமட் எம்.பி, அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் அடிப்படையில், சுகாதார அமைச்சின் தொழில்நுட்பக் குழுவினர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் கள விஜயத்தை மேற்கொண்டனர்.
இவ்வைத்தியசாலையை மீண்டும் இயங்க வைக்கும் முகமாக அதற்கான சாத்தியவள அறிக்கையை, ஒரு வார காலத்துக்குள் சம்ர்ப்பித்ததும் உடனடி நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கடந்தாண்டின் முற்பகுதியில் இருந்து விசேட கொரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவாக செயற்பட்டு வருகிறது.