அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மங்கள சமரவீர பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியை ஆதரிக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
SL VLOGE நிகழ்ச்சியூடாக"அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் யாரை ஆதரிப்பீர்கள்?" என்று ஊடகவியலாளர் தர்ஷன ஹந்துன்கொட கேட்டபோது அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
மங்கள சமரவீர சார்ந்திருக்கும் முகாமுக்கு ஆதரவளிக்கும் முடிவை சுமந்திரன் எம்.பி. இவ்வாறு விளக்கினார்.
தனது அரசியல் வரலாறு முழுவதும் தேசிய ஒற்றுமைக்காக பாடுபட்ட மங்கள சமரவீர தனது அரசியல் கொள்கையால் ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவர் வகித்த வெளிவிவகார அமைச்சுப் பதவியை இழக்க நேரிட்டது என்றும் சுமந்திரன் நினைவு கூர்ந்தார். மங்கள சமரவீர ஒரு கொள்கை ரீதியான அரசியல் தலைவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மங்கள சமரவீர, இப்போது 'உண்மையான தேசபக்தர்' (True Patriot) என்ற கருத்தியல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இந்த நோக்கத்திற்காக, 'சுதந்திர மையம்' (Freedom Hub) என்ற தகவல் தொடர்பு மையத்தையும் செயற்படுத்தி வருகிறார்.