ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள ஒரு முக்கியமான தீர்மானத்திற்கு இந்தியாவின் ஆதரவைப் பெற பிரித்தானியா புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது இந்தியாவில் இருக்கும் பிரித்தானியாவின் வெளிவிவகார அலுவலக இராஜாங்க அமைச்சர் தாரிக் அஹமட், இந்த விடயம் குறித்து இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிளுடன் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராஜதந்திர வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த உயர் மட்ட அதிகாரிகளில் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இரு தரப்பினரும் பெரும்பாலும் இந்தியாவுக்கும் பிரித்தானியாவிற்கு இடையிலான உறவுகள் மற்றும் பிராந்திய விடயங்களில் பலவிதமான பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளனர்.
இலங்கை தொடர்பான பிரச்சினை குறித்தும் கலந்துரையாடப்பட்டிருக்கும் என இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளன.
இலங்கை தொடர்பான கோர் குழு சார்பாக பிரித்தானியா ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு பல நாடுகள் ஏற்கனவே ஆதரவை வழங்கியுள்ளன, எனினும் இந்தியா எடுக்க வேண்டிய நிலைப்பாடு முக்கியமானது.
இந்த தீர்மானம் தொடர்பில் வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனினும், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசியிருந்தார், அவர் தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியதாகவும் நம்பப்படுகிறது.