இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை நிலைமைகள் குறித்து அமெரிக்காவின் சட்டவாளரும், அரசியல் முக்கியஸ்தருமான டெபோரா ரோஸ்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்ரனி பிளிங்கனுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையை சர்வதேச பொறுப்புக்கூறலுக்கு நகர்த்துவதற்கு ஏனைய நாடுகளுடன் இராஜதந்திர நடவடிக்கையில் இறங்குமாறு அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையுடனான இராஜதந்திர நகர்வுகளில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை மையப்படுத்தவும், இலங்கைக்கான சர்வதேச பொறுப்புக்கூறல் செயன்முறையை மேம்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்யவும் அமெரிக்காவை வலியுறுத்துகிறார்.
2015ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்வைத்த தீர்மானத்தை வரைவு செய்வதிலும் ஏற்றுக்கொள்வதிலும் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது.
கோட்டாபய ராஜபக்ஷ புதிய ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டவுடன், தற்போதைய அரசாங்கம் இந்தத் தீர்மானத்திலிருந்து விலகியது.
இது உறுதியான முன்னேற்றத்தின் தோல்வி மட்டுமல்லாமல், உள்நாட்டுப் பொறுப்புக்கூறலுக்கான அரசியல் விருப்பமின்மை என்பதையும் எடுத்துக்காட்டுகிறது என டெபோரா ரோஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இம் மாதம் 22ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு வரவுள்ள நிலையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இலங்கை சம்பந்தமாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றார், அதில் நாட்டின் உள்ளக அரசியல் விவகாரம் தொடர்பில் அதிகளவில் குறிப்பிடப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டு அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.