ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவிடம் நாளை மறுதினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை செய்யவுள்ளனர்.
இதற்காக இந்த இருவருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாளை மறுதினம் திங்கட்கிழமை வரும்படி அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
கடந்த 10ஆம் திகதி சியரட்ட இணையத்தளத்தின் ஊடகவியலாளர் சுஜீவ கமகே கடத்தப்பட்டு தாக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனிடையே குறித்த ஊடகவியலாளர் முன்னாள் அமைச்சர் ராஜித மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன உள்ளிட்டவர்களை நேரில் சென்று சந்தித்துள்ளதுடன், அதன் பின்னரே வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேற்படி இந்த விவகாரம் குறித்தே ராஜித மற்றும் சத்துரவிடம் குற்றப் புலனாய்வுப்பிரிவு விசாரணை நடத்தவுள்ளது.