எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சஜித் பிரேமதாச மற்றும் விமல் வீரவன்சவுக்கு இடையிலான இந்த சந்திப்பு, மஹரகமையில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவனத்தின் தலைவரின் இறுதி சடங்கில் நடந்தததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த சந்திப்பு குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சஜித் பிரேமதாச தகவல் அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் முதல் ஆண்டுவிழா ஒரு பெரிய வெற்றி எனவும், அது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் வீரவன்ச தன்னிடம் கூறியதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் இருவரும் என்ன பேசினீர்கள்? என்று கட்சி மூத்த உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு சஜித் பிரேமதாச ஒரு தெளிவான பதிலைக் கொடுக்கவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் கூட்டணி அமைப்பது குறித்து இருவரும் பேசினார்களா? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளி கட்சியின் தலைவராக செயற்படும் விமல் வீரவன்சவுக்கு எதிராக கூட்டணிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியதொரு விடயமாக பார்க்கப்படுகிறது.